தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், கட்சியின் தலைமையகமான தெலங்கானா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் 20வது நிறுவன தினத்திற்கு தலைமை தாங்கினார். ஐந்து நிமிடங்களில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூக்கிய தலைவர்கள் சிலர் மட்டும் கலந்துக்கொண்டனர். வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முகக் கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியையும் கடைபிடித்தும் விழா நடைபெற்றது.
முன்னதாக, டிஆர்எஸ் கட்சியின் தலைவர், மாநில மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி கடந்த 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி சந்திரசேகர் ராவ், டி.ஆர்.எஸ் கட்சியை நிறுவினார்.
கட்சியின் சாதனைகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர், கட்சி தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமான, தெலங்கானா தனி மாநிலம் பெற்றதோடு நின்றுவிடாமல், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாகவும் கூறினார். மின்சாரம், குடிநீர், நீர்ப்பாசனம், விவசாயம், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் டிஆர்எஸ் அரசு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.