புதுச்சேரியில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களும், மூன்று அரசு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வக தொழில்நுட்ப செவிலியர், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 610 பேர் தினக்கூலிகளாக பணியில் உள்ளனர். பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 12 நாள்களாக சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, புதுச்சேரி அரசு 2017ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள் நியமனத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை தினக்கூலிகளுக்கு வழங்குவது என கொள்கை முடிவு எடுத்ததை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலைக்குள் போராட்டம் கைவிடப்படவேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.