மாமல்லபுரத்தில் இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனை முடிவடைந்ததையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது அதிநவீன ஹாங்கி எல். 5 பாதுகாப்பு கார் மூலம் சென்னை கிண்டி ஐடிசி சோழா விடுதிக்கு திரும்பினார். சீன அதிபரை வழியனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடியும், தற்போது கோவளத்திலுள்ள நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் சீன அதிபருடன் சுற்றபார்த்த புகைப்படங்களை பதிவிட்டு, "மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "@UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி" என்றும் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,"மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது."
மற்றொரு ட்வீட்டில், "வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது. அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ." என்று ட்வீட் செய்துள்ள அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதையே அவர் சீன மொழியிலும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.