உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு, 144 தடையால் பொதுமக்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதாக சுகாதார ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ இளம்பருவத்தினர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும், முன்னெப்போதும் அவர்கள் கண்டிராத ஊரடங்கால் அவர்கள் உளவியலாக சிக்கலுக்குள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. இதனால், அவர்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற அதிர்ச்சி முடிவை எடுப்பதாக கவலைக்குரிய செய்தி புலனாகிறது.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "குழந்தைகளிடையே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு, அதிகரித்து வருவது மிகவும் தீவிரமான சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது.
தேசிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் 18 வயதுக்குக் குறைவான 66 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவது, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளத் தவறுவது போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி பெற்றோர்கள் கண்டிப்பது குழந்தைகள் மத்தியில் தற்கொலை போக்கை அதிகரிக்க காரணமாகி உள்ளது.
இது போன்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காக அவரச அழைப்பு உதவி மையத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துகையில், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கையாள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.