மத்திய அரசு தற்போது நடைபெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றியது.
இதனால் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை பயனற்றதாக போய்விடும் என்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம்கூட பாதிக்கப்படும் என்றும் பஞ்சாப், ஹாரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவசாய சட்ட திருத்தங்கள் குறித்து மத்திய அரசு இன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில், "ஒரு தேசம், ஒரு அரசு, விவசாயிகளுக்கு சதந்திரம் அளிக்க வேண்டும்" என்று அச்சிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாய மசோதாக்களை ஆதரிக்கும் வகையில் அரசு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 'ஒரு தேசம் ஒரு சந்தை' என்பதுதான் விவசாயிகளுக்கு சுதந்திரம் தரும் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 85 விழுக்காடு விவசாயிகள் சிறு விவசாயிகள். அவர்கள் தங்கள் நெல் அல்லது கோதுமைகளை விற்க வேண்டுமானால், அவர்களுக்கு நாடு முழுவதும் பல ஆயிரம் சந்தைகள் தேவை, ஒரு சந்தை அல்ல.
பெரிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆயிரக்கணக்கான விவசாய சந்தைகளை உருவாக்க இந்த மசோதாக்கள் என்ன செய்கின்றன? இப்படி ஆயிரக்கணக்கான சந்தைகள்தான் விவசாயிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை!