இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருநாட்டுத் தலைவர்களும் முனைப்புடன் உள்ளனர். இதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். தற்போது இரண்டாவது முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்பு வருகின்ற அக்டோபர் 11, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக வெளியுறவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோர் நேற்று சீனா சென்று அந்நாட்டு கம்யுனிஸ்ட் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதில், இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அந்த நாட்டு உயர்மட்டக் குழுவினர், அலுவலர்கள் உடன் வருகின்றனர். முதலில் பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு அவரை அழைத்துள்ளார்.
மேலும், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வரலாற்று சின்னங்கள் அதிகம் உள்ளதால், அங்கு இந்திய, சீன தலைவர்களின் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கும் சீனாவுக்கும் இடையே வரலாற்று ஆன்மிக தொடர்பு இருக்கும் நிலையில், இதையும் கருத்தில் கொண்டு மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பை மாமல்லபுரத்தில் நடத்த அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் காஞ்சிபுரத்தின் புராதன வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில்தான் ராணுவக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தது இங்கே நினைவுகூறத்தக்கது.