டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்ததன்பேரில், தேசதுரோக வழக்கின்கீழ் பீகாரில் இன்று ஷர்ஜீல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் காவல் துறையினர் ஒன்றிணைந்து, ஷர்ஜீல் இமாமைத் தேடி மும்பை, பாட்னா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றைய தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவரது சகோதரரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஷர்ஜீல் இமாம் பீகாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாமை இந்தியாவிலிருந்து துண்டித்துவிடுமாறு சர்ச்சைக்குரிய கருத்தை டெல்லியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷர்ஜீல் இமாம் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேசதுரோக வழக்குகள் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என முழங்கிய அனுராக் தாகூர் - தேர்தல் ஆணையம் விசாரணை