மூன்றாவது 'எதிர்கால முதலீடு முன்னெடுப்பு நடவடிக்கை' எனப்படும் எஃப்.ஐ.ஐ. கூட்டம் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்திலுள்ள அப்துல் அஸிஸ் மையத்தில் நடைபெறவுள்ளது. டாவோஸ் இன் டெஸர்ட் என்று கூறப்படும் இந்நிகழ்வானது சர்வதேச முதலீடு, சுற்றுலா மேம்பாட்டிற்கான உலக மக்களை ஈர்க்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விழாவின் தொடக்கவுரை மேற்கொள்ளவுள்ள சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு ஆணையத்தின் நிர்வாகி அல்-ருமயான் பன்முகத் தன்மை வாய்ந்த உலகச் சூழலில் முதலீட்டுக்கான திட்டமுறை குறித்து உரையாற்றவுள்ளார். இதில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி பங்கேற்று உலகப் பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
முகமது பின் சல்மான் ஆட்சியின் கீழ் இயங்கிவரும் எண்ணெய் சாம்ராஜ்யமான சவுதி அரேபியா அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு அந்நாட்டின் மாற்றுப் பொருளாதார நடவடிக்கைக்குத் திருப்புமுனையாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு இந்த முதலீட்டாளர்கள் நிகழ்வில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தாண்டு பங்கேற்கவில்லை. மேலும், செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பல்வேறு முன்னணி தொழிலதிபர்கள் கடந்தாண்டு நிகழ்வைப் புறக்கணித்தனர். அவர்கள் இந்தாண்டு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ள மோடி தனது சிறப்புரையை இந்திய நேரப்படி இரவு எட்டு மணியளவில் மேற்கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் பங்கேற்க நேற்று சவுதி அரேபியா வந்தடைந்த மோடிக்கு அந்நாட்டு மன்னர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மோடியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. எனவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால பொருளாதார செயல்திட்டங்கள், நிதிச்சந்தைகள், தற்கால பொருளாதார நகர்வுகள் குறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர் ரே டேலியோவுடன் மோடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் மனிதவளம், சுற்றுச்சூழல், உள்நாட்டு வளர்ச்சி, தன்னிறைவு வாழ்க்கை போன்ற கருப்பொருள்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.