இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 54 ஆயிரத்து 758 பேர் அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,792 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் மும்பையை பொறுத்தவரை கடந்த 10 நாள்களாகவே கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் 1200 முதல் 1800 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, ”1916 என்ற மாநகராட்சியின் அவசர அழைப்புதவி மையத்திற்கு 72 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. அதில், 21 ஆயிரம் அழைப்புகள் படுக்கை வசதிகளுக்காகவும், 11 ஆயிரம் அழைப்புகள் ஆம்புலன்ஸ்களுக்காகவும் அழைக்கப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக 10 மணி நேரம் வரை காத்திருக்கும் அவல நிலை அங்கு நிலவுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.