கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த மருத்துவ செலவுகளை விட சில தனியார் மருத்துவமனைகள் அதிகமாக வசூலிப்பதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் கரோனா அதிகமாக பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், இந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதனை விசாரிக்கும் பொருட்டு அம்மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்ட ஆட்சியர் ரவீந்திர பின்வாடே அரசு சார்பாக நோயாளிகளின் பில்களை தணிக்கை செய்ய ஆடிட்டர் குழுவை நியமித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, ஜல்னாவில் உள்ள விவேகானந்தா தனியார் மருத்துவமனை, நோயாளிகளிடம் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு அதிக பணம் வசூலித்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, நோயாளிகளிடமிருந்து அதிகமாக வசூலித்த தொகையான ஒரு லட்சத்து 93ஆயிரத்து 986 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு விவேகானந்தா தனியார் மருத்துவமனைக்கு ஜல்னா ஆட்சியர் ரவீந்திர பின்வாடே உத்தரவிட்டார்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிகளின் கீழ் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...சுஷாந்த் சிங் வழக்கு: விசாரணை வளையத்தில் 25 பாலிவுட் பிரபலங்கள்!