இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய குருமூர்த்தி பாஜகவுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். பாஜக இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்றும் அவர் ஆரூடம் கூறியிருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டு திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று அவர் கூறிய நிலையில், அதற்கு தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு நாரதர் வேலை செய்ய குருமூர்த்தி ஆரம்பித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குருமூர்த்தியை பொறுத்தவரை அன்றைய அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறல். தேவையின்றி காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பான கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் சோ, 'அயோத்தியில் நடந்தது அயோக்கியத்தனம்' என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது வெளிவந்த துக்ளக் அட்டைப்படத்தில் கருப்பு வண்ணம் பூசி, எதிர்ப்பை தெரிவித்ததோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் எழுதினார். 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களமிறக்கி, திமுக, தமாகா கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தார். ஆனால், இன்றைய துக்ளக் இதழ், குருமூர்த்தியிடம் சிக்கி, வகுப்பு வாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.