தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் முடியாது’

பாஜக, அதிமுக கூட்டணியை முற்றிலும் துடைத்தெறிந்து திமுக, காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

alagiri
alagiri

By

Published : Jan 17, 2021, 1:33 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய குருமூர்த்தி பாஜகவுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். பாஜக இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்றும் அவர் ஆரூடம் கூறியிருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டு திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று அவர் கூறிய நிலையில், அதற்கு தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு நாரதர் வேலை செய்ய குருமூர்த்தி ஆரம்பித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குருமூர்த்தியை பொறுத்தவரை அன்றைய அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறல். தேவையின்றி காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பான கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் சோ, 'அயோத்தியில் நடந்தது அயோக்கியத்தனம்' என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது வெளிவந்த துக்ளக் அட்டைப்படத்தில் கருப்பு வண்ணம் பூசி, எதிர்ப்பை தெரிவித்ததோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் எழுதினார். 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களமிறக்கி, திமுக, தமாகா கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தார். ஆனால், இன்றைய துக்ளக் இதழ், குருமூர்த்தியிடம் சிக்கி, வகுப்பு வாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாக குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். மக்கள் மீது நலனோ, சமூக நீதியில் அக்கறையோ, உரிமைகளைக் காப்பதிலோ, தமிழ் மொழி புறக்கணிப்பதைத் தடுப்பதிலோ அக்கறை காட்டாத வகுப்புவாத சனாதனவாதியான குருமூர்த்தி, திரைக்குப் பின்னாலே இருந்துதான் செயல்பட முடியுமே தவிர, என்றும் மக்கள் மன்றத்திற்கு வர முடியாது. தமிழக மக்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறார்கள்.

தமிழக மக்கள் ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பாஜக, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துக்ளக் விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details