கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக, அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் இரு விமானிகள், ஐந்து ஊழியர்கள், 10 குழந்தைகள், 174 பயணிகள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் இந்திய விமான படையின் முன்னாள் விமானி தீபக் வசந்த் சதே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்த 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.