உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பார்ரா காவல் நிலைய பகுதியில் கால்வாய் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு காவலர்கள் சென்று பார்த்தபோது காரின் பின் சீட்டிலிருந்து பத்திரிகையாளர் ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருகலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பத்திரிகையாளர் காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தெற்கு கான்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் தீபக் கபூர் கூறுகையில், "பார்ரா காவல் நிலையம் அருகே ஒரு கார் நின்று கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அந்த காரின் பின் சீட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளரின் உடலைக் கண்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்திரிகையாளரின் பெயர் அஷூ யாதவ் என்று தெரியவந்தது. இதற்கிடையே, ரயில் பஜார் காவல் நிலையத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பத்திரிகையாளர் அஷூ யாதவ் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
பார்ரா காவல்துறையினர் ரயில் பஜார் காவல்துறையினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்தனர். பத்திரிகையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு இருக்கிறோம். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே கொலைக்கான தகவல்கள் தெரியவரும்" என்றார்.