உலகைச் சூறையாடிவரும் கோவிட்-19 நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அகமதாபாத்தில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 830 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 விஷயத்தில் குஜராத் அரசு மெத்தனம் காட்டிவருவதாக விமர்சனங்கள் குவிந்துவரும் வேளையில், அகமதாபாத் சிவில் மருத்துவமனை சர்ச்சைகளின் கூடாரமாகிவருகிறது.
இங்கு கோவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வசதிகள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியான காணொலிகள் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நோயாளிகளின் உயிருடன் மாநில அரசு விளையாடக் கூடாது எனச் சாடிய நீதிமன்றம், மருத்துவமனையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து, அரசு அலுவலர் குழு ஒன்று அம்மருத்துவமனை சென்று உரிய நடவடிக்கை மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால், தொடர்ந்து அங்கிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் கோவிட்-19 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.