மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தலைநகர் டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்.
தொடர்ந்து, தேசிய தலைநகர் பகுதியுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்களில், டெல்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்க அமித் ஷா உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை செயலர் பத்மினி சிங்லா இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "டெல்லியில் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த கரோனா பரிசோதனையை உடனடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் ஆய்வகங்கள் ஒரு நாளைக்கு மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கு உச்ச வரம்பு இல்லை. அவர்கள் 24 மணிநேரம் முதல் அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் முழு திறனுடன் செயல்பட வேண்டும் என்றும், தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையை பூர்த்திசெய்யும் வகையில், சோதனைத் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போதுவரை 42 ஆயிரத்து 829 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:உபியில்முறைகேடுகளை அம்பலப்படுத்திய காவல்துறை அலுவலர் இடமாற்றம்!