இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர் காந்தி. அவர் தனது சிந்தை, பேச்சு, செயல்களால் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அன்று உலகில் நிலவிவந்த ஆதிக்கம், அடிமைத்தளையை நீக்க சத்தியாகிரகம், அகிம்சை போன்ற வலிமையான ஆயுதங்களைக் கையிலெடுத்தார் காந்தி. சமரசமற்ற உறுதியான காந்தியின் செயல்பாடுகள் உலகின் போக்கையே மாற்றியமைத்தது எனலாம்.
'காந்தியின் அகிம்சை பண்பு கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் செல்லுபடியாகுமா?, ஜெர்மனியில் ஈவு இரக்கமின்றி இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ஆட்சியாளர்கள் போன்றோரிடம் அகிம்சை முறை சாத்தியமா?' என்ற கேள்விகள் காந்தியிடம் எழுப்பப்படுவதுண்டு. காந்தி தனது நடவடிக்கைகள் அனைத்தையும் பெரும் சிந்தனைக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தியுள்ளார். இடம், சூழலுக்கு ஏற்றவாறு காந்தியின் சத்தியாகிரகப் போராட்டங்கள் வடிவம் பெற்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காந்தி இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது தெற்காசியா தொடங்கி உலகளவில் பல்வேறு தலைவர்களின் ஆதர்சமாக இருந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி நடவடிக்கைக்கு எதிராகக் காந்திய போரட்ட வழியை முன்னெடுத்தவர் பெனிகோ அக்வினோ. அவரின் இந்த முயற்சியால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மார்கோஸின் சர்வாதிகாரம் நீங்கி ஜனநாயகம் மலர்ந்தது.
ராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியில் சிக்கித் தவித்த தென்கொரியாவில், 1987ஆம் ஆண்டு தொடங்கி 2003ஆம் ஆண்டுவரை ஜனநாயகத்திற்கான அடித்தளத்தை கிம் யங் சாம், கிம் டே ஜங் என்ற இரு தலைவர்கள் உருவாக்கினர். இவர்கள் இருவரும் காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள்.
மியான்மரில் தற்போது தலைமை வகிக்கும் ஆங் சாங் சூகி, தனது பொதுவாழ்வில் காந்தியின் பாதிப்பு குறித்து தொடர்ச்சியாகப் பேசியுள்ளார். அரசின் அடக்குமுறையை எதிர்த்தால் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் சூகி. பின்னாளில் தனது போராட்டத்தில் வெற்றிகண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்று அந்நாட்டின் தலைவராகவும் உருவெடுத்தார்.