டெல்லியில் ரிட்ஜ் சாலைப் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று (ஆக. 22) ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், பயங்கரவாதியை சரணடையும்படி எச்சரித்தனர்.
இருப்பினும், அவர் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். காவல் துறையினரும் அதற்கு பதிலடி கொடுத்த நிலையில், சிறிது நேரத்தில் பயங்கரவாதியை கைது செய்து, லோதி காலனியில் உள்ள சிறப்பு செல் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர். ஐஇடி வெடி குண்டு ஒன்றும் பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து, விசாரணையின்போது பயங்கரவாதி அளித்தத் தகவலின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் பகுதியில் இன்று காவல் துறையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடி பொருள்கள் நிரம்பிய ஜாக்கெட்டை காவல் துறையினர் கைப்பற்றினர்.