இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரியில் கரோனா தொற்று தற்போது 10 விழுக்காடு குறைவாக உள்ளது. நேற்று இருவர் இறந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளும்போது கரோனா அறிகுறி இருந்தும் மக்கள் ஏதும் தெரிவிக்காமல் முறையான சிகிச்சைப் பெற முன்வராத காரணத்தால் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் தேதி 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது.
பள்ளி திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிமுறைகள் நாளை (அக். 1) வெளியிடப்படும். அதற்கு முன்பாக நாளை கல்வித் துறையில் மாணவர்களுக்கு கரோனா தொடர்பான தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட உள்ளது. இதனை மாணவர்கள் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் மேலும் 104 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.