புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கோயில்களில் விழாக்களின் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், இளம்பெண் ஒருவர் இந்த நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெண் காவலர் ஒருவர், அப்பெண் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரில், அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, சிசிடிவி காட்சிகளில் இருப்பது தான் என்று அப்பெண் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.