சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகிய அம்சங்களை முன்னெடுத்து பாரதிய சாத்ரா சன்சத் அமைப்பு முன்னோடி முதலமைச்சர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் கொண்டு வழங்கப்படும் இவ்விருது, இந்தாண்டு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கு வழங்கப்பட்டது. சிறந்த நிர்வாகம், புரட்சிகரமான திட்டங்கள், சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மையப்படுத்திய வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய அம்சங்களுக்காக இவ்விருது அம்ரீந்தர் சிங்குக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். விருதைப் பெற்றுக்கொண்ட அம்ரீந்தர் சிங், 'நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட பஞ்சாப் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டை மேம்படுத்த துடிப்புமிக்க இளைஞர்கள் பொது வாழ்விற்கு வரவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.