கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து முக்கிய வழக்குகளை மட்டும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கடந்த திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையில், கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீதிமன்றம் வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ‘வித்யோ’ என்ற செயலி வாயிலாக காணொலி முறையில் வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும் என்றும், இந்த வீடியோ பதிவைப் பகிரக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரிக்கவுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் கூறியது.
இந்நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த தகவலை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 59,670 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், ஆனால் ஒரு மாத காலத்திற்குள் அந்த எண்ணிக்கை 60,469 ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.