தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 7:15 PM IST

Updated : Apr 22, 2020, 3:54 PM IST

ETV Bharat / bharat

சொந்த ஊருக்குச் செல்லும்போது உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்!

பிஜாப்பூர்: வீட்டிற்கு நடைபயணமாகச் செல்லும்போது உயிரிழந்த 12 வயது சிறுமியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவித்தார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர்
சத்தீஸ்கர் முதலமைச்சர்

கரோனாவினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறையால், அகதிகள் போல மக்கள் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினர். அதில் ஒரு குழுவில்தான், சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜாம்லோ மக்தாமும், தனது பயணத்தைத் தொடங்கினார்.

தெலங்கானா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரிந்த ஜாம்லோ, கரோனா அச்சத்தில் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவுடன் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபயணத்தைத் தொடங்கினார்.

நெடுஞ்சாலையிலிருக்கும், கெடுபிடிகளைத் தவிர்க்க அக்குழுவினர் காடுகள் வழியாகவே நடந்துசென்றனர். ஊரடங்கு ஏற்படுத்திய உணவுப் பற்றாக்குறை, சிறுமியை வாட்டிவதைத்தது. ஆனாலும், குழந்தைகளுக்கே உண்டான குதூகலத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். சுமார் 150 கி.மீ. கடந்த ஜாம்லோவால் அதற்குமேல் நடக்க முடியவில்லை.

வெயிலின் தாக்கம், பசி, தாகம் என அனைத்தையும் ஒரே வேளையில் சமாளிக்க முடியாத சிறுமி, சனிக்கிழமை தனது வீட்டை நெருங்கும் வேளையில், வயிற்று வலியுடன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெறும் 14 கி.மீ. தொலைவில், சிறுமி தங்களைப் பிரிந்ததை ஏற்றுக் கொள்ளமுடியாமல், மொத்தக் குழுவும் அதிர்ச்சியில் உறைந்தது.

சிறுமியை பரிசோதித்த மாவட்ட மூத்த மருத்துவ அலுவலர் பி.ஆர். புஜாரி, ”சிறுமிக்கு கடுமையான நீரிழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்துள்ளது. அவரது ரத்த மாதிரியின் முடிவுகள் கரோனா இல்லையெனத் தெரிவிக்கிறது” என்றார்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் வழங்குவதாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்தார். மேலும், தன்னார்வலர்களின் நிதியிலிருந்து 4 லட்சம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இஸ்லாமியர்களுக்கு இந்தியாதான் சொர்க்கம் - மத்திய அமைச்சர்

Last Updated : Apr 22, 2020, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details