திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் புதிய ராக்கெட் ஏவுதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.27) தொடங்கி வைத்தார். இந்த ராக்கெட் ஏவுதளம் நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழில் கொடுத்த விளம்பரம் ஒன்றில், சீனா நாட்டு ராக்கெட்டின் புகைப்படம், அந்நாட்டுக் கொடியுடன் இடம் பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம், தற்போது பிரதமர் மோடியின் முயற்சியால், தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தற்போது மாநில அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனியார் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், சீனா ராக்கெட், சீனா தேசியக்கொடியுடன் இடம் பெற்றுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என கனிமொழி எம்பி கேட்கிறார்.
திமுகவிற்கு நாட்டின் மீது மதிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே 1967 முதல் 69 ஆண்டு காலகட்டத்தில் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான கூட்டம், விஞ்ஞானி சதீஷ் தவான் என்பவர் தலைமையில் நடைபெற்றது.