திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த ஜூலை 4ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றபோது, கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென வீட்டிற்குள் சென்று தாழிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்த போது உடலில் தீப்பற்றிய ராஜ்குமார் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக காவல் துறையினர் தீயணைப்புக் கருவி உதவியுடன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அருகில் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.
மேலும், 50 சதவீதம் தீக்காயம் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.