தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 2:56 PM IST

ETV Bharat / state

செக்யூரிட்டி ட்ரெஸ் வாங்கச் சென்ற நபருடன் பழக்கம்.. கணவனைக் கொன்ற மனைவி.. திருப்பூரில் நடந்தது என்ன? - Murder By Extramarital Affair

Murder By Extramarital Affair In Tiruppur: திருப்பூர் அருகே திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததைக் கண்டித்த கணவனைக் கொலை செய்துவிட்டு, கேரளாவில் தலைமறைவாகியிருந்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பார்வதி மற்றும் ரவி
கைது செய்யப்பட்ட பார்வதி மற்றும் ரவி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் இரவு நேர காவல் பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 4ஆம் தேதி குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிரை பகுதியில் இருந்த புதர் ஒன்றில் சந்திரன் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சந்திரன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் எதற்காக குன்னத்தூர் வந்தார், அவரை கல்லால் தாக்கி கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

போலீசாரின் அந்த விசாரணையில், சந்திரனின் மனைவி பார்வதி (40) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ரவி (50) ஆகியோர் சேர்ந்து சந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்ய முயன்றபோது இரண்டு பேரும் தலைமறைவாகி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களது செல்போன் டவர் மூலமாக தேடுதல் பணியைத் தொடர்ந்த போலீசார், அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனை அடுத்து, கேரளாவில் பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அவர்களிடம் சந்திரனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன்படி, சந்திரன் முதலில் திருப்பூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் ரவியும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென சந்திரன் வேலையை விட்டு நின்றுள்ளார். இதையடுத்து, அந்த நிறுவனத்தினர் சந்திரனிடம் இருந்து காவல் பணிக்கான சீருடையை வாங்கி வருமாறு ரவியிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி ரவி, சந்திரனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சந்திரனின் குடும்பத்தோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் சந்திரனின் மனைவி பார்வதிக்கும், ரவிக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவாக மாறியுள்ளது.

இது குறித்த தகவல் சந்திரனுக்கு தெரியவரவே, அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. ஆகவே, சந்திரனின் மனைவி பார்வதியும், ரவியும் சேர்ந்து சந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சந்திரனிடம் பேசிய ரவி, மது அருந்த சந்திரனை குன்னத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். சந்திரன் அதிகம் மது அருந்தி சுயநினைவை இழந்த நிலையில், அங்கு இருந்த பெரிய கல் ஒன்றை எடுத்த ரவி, சந்திரனின் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார்.

இதன் பின்னர் அங்கிருந்து திருப்பூர் வந்த அவர், வழக்கம்போல தனது பணியை தொடர்ந்துள்ளார். ஆனால், போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, தாங்கள் மாட்டிக் கொள்வோம் என பயந்து பார்வதியும், ரவியும் கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறாக பார்வதியும், ரவியும் வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரி எஸ்பி வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details