திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக 16ஆவது பட்டமளிப்பு விழா பார்ன் ஹாலில் நடைபெற்றது. இணையதளம் வாயிலாக முதல்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்து 777 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி பேசுகையில், "கல்வி மற்றும் கற்றல் என்பது ஒரு வாழ்நாள் செயல்முறை. இளம் பட்டதாரிகள் தங்கள் கல்வியின் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த தொற்றுநோய்க் காலம், தனது 55 ஆண்டுகால உழைக்கும் வாழ்க்கையை மீண்டும் கற்றுக் கொடுத்துள்ளது.
விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், கேள்விகளைக் கேட்பது, திறந்த மனதுடன் இருப்பது ஆகியவை வாழ்க்கையில் எதையும் வெற்றிகரமாக கையாள மையமாக இருக்கும். விமர்சன சிந்தனை திறன்களின் மூலம் தான் ஒருவர் உண்மையில் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தன்மைக்கு மாற்றாக எதுவும் இல்லை.
அது வாழ்க்கையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 7 மாதங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாடுபடுகின்றனர். நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுடன் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும். இந்த நெருக்கடி நேரத்தில் ஒற்றுமை மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றின் உணர்வு இந்த வாழ்வின் மையத்தில் உள்ளது.
இந்த பச்சாதாபம் மற்றும் ஒற்றுமை உணர்வு நம்மை மனிதனாக்குகிறது. உண்மை மற்றும் நேர்மைதான் எல்லாவற்றிற்கும் அடித்தளம். நம்முடைய எல்லா செயல்களிலும் உண்மையும் நேர்மையும் இருந்தால், அனைத்தும் கிடைக்கும். இந்தத் தொற்று நெருக்கடி, பல்லாயிரக் கணக்கான நமது சக குடிமக்கள் நம் நாட்டில் எதிர்கொள்ளும் அப்பட்டமான சமத்துவமின்மையையும் அநீதியையும் வெளிப்படுத்தியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தைரியமும் மனதில் தாராள மனப்பான்மையும் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: செங்கல் விலை வீழ்ச்சியால் மனமுடைந்த தொழிலாளிகள்!