திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2012, 2013,2014ஆம் ஆண்டில் மேலாளர் சுரேஷ்,கணக்காளர் முரளி காந்த், உதவியாளர் குருசீனிவாசன் ஆகியோர் ஊழியர்களின் வைப்பு நிதி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய உதவி தொகை பணம், நகராட்சி நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் பணம் ஆகியவற்றில் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2014ஆம் ஆண்டு 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அதன்பேரில் 3 பேரையும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். அதைதொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அவர்களுடன் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் நேற்று லஞ்ச ஒழிப்பு காவல் துறை ஆய்வாளர் விஜய் தலைமையில் விசாரணை நடந்தது.
மேலும்,அங்கிருந்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்நிலைக் கருவூலத்திற்கு சென்று வாணியம்பாடி நகராட்சி சம்பந்தமான ஆவணங்களைக் கேட்டும் அவர்கள் விசாரித்தனர்.