திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காப்புக்காட்டுப்பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக திருப்பத்தூர் வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்றிரவு ஆலங்காயம் எல்லையான மங்களம் காப்புக்காட்டுப்பகுதிகளில் ஆலங்காயம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் தீ வைத்து தீயிலிருந்து தப்பித்து வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கீரிப்பிள்ளையை வேட்டையாடி எடுத்துச்செல்வது தெரியவந்தது.
அதனையடுத்து அவர்களைப் பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் நால்வரும் ஆலங்காயம் அடுத்த ஆதிகுட்டை பகுதியை சேர்ந்த சதீஷ், மணி, பெருமாள், சௌந்தர் என்பது தெரியவந்தது.
சாட்சி ஆதாரங்களுடன் சிக்கிய நால்வரையும் பிடித்த வனத்துறையினர் அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.