தூத்துக்குடி கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பீடி இலைகள் படகில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோரக் காவல்படையினர் தூத்துக்குடி பழைய துறைமுகம், திரேஸ்புரம் பகுதி உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது வள்ளம் ஒன்று கரை கடந்த நிலையில் பழுதாகி கடலில் நின்றுகொண்டிருந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் வள்ளத்தைச் சோதனை செய்ததில் தார்ப்பாய்க்கு அடியில் 34 பீடி பண்டல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. பண்டல்கள் ஒவ்வொன்றிலும் அடுக்கடுக்காய் பீடி இலைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இவை மொத்தம் 1.20 டன் எடையும், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பும் கொண்டது எனவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வள்ளத்தைப் பறிமுதல்செய்த கடலோரக் காவல் படையினர், தூத்துக்குடி பழைய துறைமுக கடற்கரை தளத்திற்குக் கொண்டுவந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், அந்த வள்ளம் திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகூர் (42) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அவர் இலங்கைக்கு கடத்துவதற்காக வள்ளத்தில் பீடி இலைகளைப் பதுக்கிவைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர். இது தொடர்பாக வடபாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பறிமுதல்செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: அடையாற்றில் மணல் எடுத்துச் சென்ற 3 லாரிகள் - காவல்துறை விசாரணை