திருவாரூர்: திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைவீதியில் கடந்த 4.7.2021 அன்று திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரோனா காலகட்டம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து வருபவர்களை காவல்துரையினர் சோதனை செய்தனர். அப்போது மதுபாட்டில்களை கடத்திக் கொண்டு வந்த இரு நபர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் பிடிக்கப்பட்ட 2 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை கணக்கில் காட்டாததால் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டுள்ளனர்.
இரண்டு நபர்களும் நூதன முறையில் மது பாட்டில்களை உடலில் சுற்றி கடத்தி வந்த வீடியோ அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியப் போக்கில் இருந்ததாக கூறி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் உட்பட 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மது பாட்டில்களை கடத்தி கொண்டு வந்த நபர்களை கைது செய்யாமல் விடுவித்ததற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையின்பேரில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல் நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலா உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.