அம்பத்தூர் காவல்நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவுக்கான காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடம், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இரண்டு அறைகள் கொண்ட கட்டடத்தில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி மேற்கூறையில் இருந்து சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்து, பெண் காவலர்கள் காயம் அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. ஜன்னல்கள், ஸ்விட்ச் பாக்ஸ், கதவுகள் உடைந்த நிலையில் உள்ளன. இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை பெரும்பாலான காவலர்கள், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்று விட்ட நிலையில், ஒரு பெண் காவலர் மட்டும் காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது, பிரேமா என்ற 60 வயது மூதாட்டி, புகார் அளிக்க வந்தபோது, திடீரென்று கட்டட மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், பிரேமா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பக்கத்து காவல் நிலைய காவலர்கள், மூதாட்டியை மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.