ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சந்தீப்(40). இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நகைகள் வாங்கி விற்பதற்காக சென்னை மாதவரம் ஆந்திர பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பாரிமுனை செல்ல வந்திருந்தார்.
சந்தீப் பணத்துடன் வந்துள்ள தகவல் அறிந்து ஆந்திராவிலிருந்து இவரை அடையாளம் தெரியாத ஐந்து பேர் இரண்டு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்தனர். அவர்களை செங்குன்றம் பாடியநல்லூரிலுள்ள செக் போஸ்ட்டில் காவல் துறையினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். இதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவல் துறையினரைக் கண்டதும் அப்படியே திரும்பிச் சென்று தலைமறைவாகினர்.
இதனால் காவல் துறையினருக்கு இவர்கள் மேல் சந்தேகம் வந்தது. அவர்களை திருவள்ளுர் செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஆந்திரா நெல்லூரைச் சேர்ந்த கோபி (29), பிரித்திஷ் (28), ஆஞ்சநேயலு (24) ஆகிய மூவரும் கூறிய வாக்குமூலத்தில்,"சந்திப் என்ற வியாபாரி சென்னைக்கு வந்து நகை வாங்கி செல்ல இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக பின்தொடர்ந்து அவரை வழிமறித்து தங்களிடம் உள்ள மிளகாய் பொடியை அவர் கண்ணில் தூவி பணத்தை கொள்ளையடித்து திரும்பிச் செல்ல இரண்டு சக்கர வாகனத்தில் வந்தோம்" எனக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.