கரோனா பெருந்தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில், பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறி ஆகியுள்ளன.
அந்த வகையில், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சிக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில், உளுந்தை திமுக ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷ் தன் சொந்த செலவில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.