திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகள் குழாய்கள் மூலம் செப்பாக்கம் கிராமத்தின் அருகே குளத்தில் சேகரித்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சாம்பல் குளத்தில் இருந்து பறக்கும் சாம்பல் கழிவுகளால் பாதிப்பு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். தற்போது 120குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
சாம்பல் கழிவுகளை குளத்திற்கு கொண்டு செல்லும் ராட்சத குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு கிராமத்தை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு முற்றிலுமாக கிராமத்தை சாம்பல் கழிவு நீர் சூழ்ந்ததாகவும், அனல்மின் நிலைய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சாம்பல் கழிவுகள் உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து கழிவு சாம்பல்களை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உடைப்பு ஏற்பட்டுள்ள சாம்பல் குழாய்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.