திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தினேஷ் - சுஜாதா. இவர்களுக்கு 7 வயது நிரம்பிய திலீப் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் திலீப் குமார், தனது நண்பர்களுடன் இணைந்து, அருகேயுள்ள பூண்டி ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
அனைவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென திலீப்குமார் சேற்றில் சிக்கியுள்ளார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததால், வெளியே வரமுடியாமல் வெகு நேரம் போராடியுள்ளார். இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் காப்பாற்ற முடியாமல், கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடிய பொழுது, திலீப் குமார் ஆழமான சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்தது தெரியவந்தது. பின் மயக்க நிலையிலிருந்த சிறுவனை மீட்ட பொதுமக்கள், பட்டரைபெரும்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
சிறுவனை பரிசோதித்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலி, சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.