திருநெல்வெலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரனுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற வலுவான கூட்டணியாகக் களத்தில் இறங்கியுள்ளது.
ஆனால், பாஜக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் செய்யும் ஊழல்களை வைத்து அவர்களை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். பாஜக தேர்தல் ஆணையம், வருமானவரித் துறை ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் மிரட்டுகிறது.
இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது மக்களைப் பார்க்கும்போது தெரிகிறது. பாஜக மக்களுக்கு எதிரான வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை அமல்படுத்தி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில், ஒரு எம்எல்ஏ, எம்பிகூட இல்லாத நிலையில் தமிழ்நாட்டை பாஜக ஆட்சி செய்துவருகிறது. புதுச்சேரியைப்போல் தமிழ்நாட்டையும் மாற்ற நினைக்கிறது.
நாட்டில் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துவிட்டது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை முன்னேற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
அதிகமாக வாழை விவசாயம் பயிரிடப்பட்டு இங்கு விளைந்தாலும், அதனைப் பாதுகாக்கும் குளிர்பதன கிட்டங்கிகள் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றதும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இது ஒரு வரலாற்று முக்கியமான தேர்தல். இது பெரியார், காமராஜ், கருணாநிதி, ராஜாஜி, வ.உ.சி. எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண் பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்போ ஃபிளையிங் ஸ்குவாட் என்ன சும்மாவா? காவலரிடம் திமுகவினர் வாக்குவாதம்