தேனி மாவட்டத்தில் கோவிட்-19 நோய்ப் பரவலால், மார்ச் முதல் மே மாதம் வரையில் நூற்றுக்கும் குறைவானோர் பாதிப்படைந்தனர். ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்தில் இருந்து வருகை புரிந்தவர்களால், ஒரே மாதத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவியது.
இதன் காரணமாக நேற்று(ஜூலை 5) வரை 1009 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண்மணி, ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 52 வயது பெண், பெரியகுளத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கம்பத்தைச் சேர்ந்த 72, 60, 56 வயது முதியவர்கள் என 7 பேர் பலியாகியுள்ளனர்.
தேனி, ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 நபர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் தேனி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 100 பேர், ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 634ஆக குறைந்துள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள், தொற்று கண்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 377 நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.