தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு 120 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி அதனை உண்ணாமல் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இதையறிந்த மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளிடம் விசாரிக்கவே, நேற்று (ஜூலை 25) வரை வழங்கிய உணவில் எந்தவித குறைகளும் கிடையாது. நேற்று வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததால் அதனை உண்ணாமல் இரவு உணவை புறக்கணித்துள்ளோம் என்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு மாற்று உணவு ஏதும் தயார் செய்து தரப்படவில்லை. கரோனா நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டிய அரசு மருத்துவமனையில், இது போன்று குறைபாடுகள் நிகழ்வதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தரமற்ற உணவு வழங்கிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.