நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் காரணமாகப் பல இடங்களில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
குன்னூர் அருகேயுள்ள சரவண மலைப் பகுதியில் ஒரு வாரமாக இரவும் பகலுமாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனை அணைக்க தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் தீயை காற்றின் வேகத்தால் முழுமையாக அணைக்க முடியவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின் பேரில், விமானப்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஹெலிகாப்டர் இன்று வரவழைக்கப்பட்டது. உதகையிலிருந்து பைக்காரா நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் ரசாயனம் கலக்கப்பட்டு, அதனை ஹெலிகாப்டரின் மூலமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து வருவதால் வனப்பகுதியிலிருந்த ஏராளமான அரியவகை மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகின.