ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகளின் பட்டியலைத் தயாரித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் நேற்று (பிப். 14) வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் கமுதி தாலுகாவில் உள்ள அரசு ஊழியர்கள், இறந்தவர்கள் பெயர்களும், குடியிருப்புகளே இல்லாத அழிந்துபோன கிராமங்களின் பெயரில் கிளைக் கழகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து திமுகவினர் கூறியதாவது, திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கடந்தாண்டு மார்ச் மாதம் இறந்தபின்பு கிளைக் கழகத்திற்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின் எந்தத் தேர்தலும் நடத்தாமல் கிளைக் கழக நிர்வாகிகளை தலைமை அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இறந்துபோனவர்கள், வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள், அரசு ஊழியர்கள் திமுக உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர் உள்ளது.
இதனை தலைமை தெரிந்துகொள்ளும் வகையில், கடலாடி முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டி நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் இல்லாமல் தமிழ்நாடு எவ்வாறு வெற்றி நடைபோடும்’: கனிமொழி கேள்வி