கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க மளிகை கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரில் ரங்கன் மளிகை கடையில் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் சுரேசை எச்சரித்து, தற்காலிகமாக கடையை மூட உத்தரவிட்டனர்.
மேலும் இது போன்று அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.