நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேளூர்நாடு ஊராட்சி சோளகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிடாரன் (75). இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இதையடுத்து நேற்று முன்தினம் (செப். 27) தனது வயலில் இருந்த காளானை எடுத்து வந்து, மனைவி செல்லாமாள், மகள் பூங்கொடி மற்றும் பேரன் சிவக்குமார் ஆகியோருடன் சமைத்து சாப்பிட்டுள்ளார்.
காளானை சாப்பிட்ட பின் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது விவசாயி பிடாரன் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்த நிலையில், மற்ற மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வாழவந்திநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிடாரன் விஷக்காளான் எனத் தெரியாமல் எடுத்து வந்து தனது குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
விஷக்காளானை சாப்பிட்டதால் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், உயிரிழப்பும் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா நகரில் வீடு வீடாக சென்று ரெய்டு நடத்தும் போலி போலீஸார் - சிக்கிய வீடியோ!