நாகப்பட்டினம் மாவட்டம் காரப்பிடாகை பகுதியை சேர்ந்தவர்கள் முருகராஜ்-கங்கா தம்பதி. இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக தகராறு இருந்துள்ளது.
கணவர் அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவதாக மனைவி கங்கா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக தேசிய குழு உறுப்பினராக இருந்துவரும் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த பிலோமினா என்பவருடைய உதவியை கங்கா நாடியிருக்கிறார்.
இதுகுறித்து பிலோமினா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று கேட்டபோது, அங்கிருந்த காவலர்கள் தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். உடனே பிலோமினா காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிலோமினாவை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் காவலர்கள் பிலோமினாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் நூதன போராட்டம்!