மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் ஹர்ஷத் என்பவரிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் மதுரை காவல் ஆய்வாளர் வசந்தியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்சத். இவர், தனது பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க ஜூலை மாதம் 5ஆம் தேதி 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை வந்துள்ளார்.
மதுரை - தேனி சாலை அருகில் அவர் வந்தபோது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பிடுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கடந்த ஜூலை 27ஆம் தேதி அர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10ஆம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 2,26,000 பணம் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த வசந்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மனு செய்தனர். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி இன்று(செப்.3 ) மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1 ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டதையடுத்து காவலர்கள், அவரை பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!