பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பல பகுதிகளிலும், இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்கள் முன்பும், காவல் துறையினர் குவிக்கபட்டுள்ளனர். நாகர்கோவிலில் இடலாகுடி, திட்டுவிளை, தேங்காய்பட்டிணம், திருவிதாங்கோடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் உட்பட 243 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்டிபிஐ இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் மத்திய அரசு நேற்று இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து ஐந்து ஆண்டுகள் தடை செய்துது.
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தக்கலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யபட்டனர்
இதையும் படிங்க: உலக சுற்றுலா தினம்: கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு