கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தனியார் நிறுவனம் நடத்திவரும் டேவிட் என்பவரிடம் இரண்டு வெளிநாட்டவர் 10 ஆயிரம் கொடுத்துவிட்டு சில்லறை பெற்றுக்கொண்டு, பேருந்தில் வேறு இடம் செல்வதாகக் கூறி வெளியே சென்றனர். ஆனால், அவர்கள் பேருந்தில் செல்லாமல் காரில் ஏறுவதைப் பார்த்த கடைக்காரர் சந்தேகம் அடைந்தார்.
பின்னர் தனது கடையில் இருந்த கல்லாவைப் பார்த்தபோது, அதில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான பணம் காணாமல் போனது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் காவல் துறையினருக்குத் தகவலளித்தார். இதனையடுத்து வெளிநாட்டவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ரிஸா, மிசாம் என்று அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, மும்பை வழியாக இந்தியா வந்தது. இருவரிடமும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருந்ததால் அங்கிருந்து வாடகை காரை புக் செய்து, தாங்களே அதை ஓட்டி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வந்து, பலரிடம் இதுபோன்று ஆயிரக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுய உதவிக் குழுவில் பல கோடி மோசடி: பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை குற்றச்சாட்டு