சுசீந்திரம் வழியாக வரும் பழையாற்றில் வடக்கு தாமரைக் குளம் பகுதியில் பிள்ளை பெத்தான் அணை என்ற ஒரு சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தைச் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் நேற்று பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ’சுசீந்திரம் வழியாக வரும் பழையாற்றில் எப்பொழுதும் அதிகளவில் நீர் வரத்து உள்ளது. இந்த நீர் அத்தனையும் மணக்குடியில் உள்ள பொழி முகத்தின் வழியாக வீணாகக் கடலில் கலந்து விடுகிறது.
பணியாற்று பகுதியில் பிள்ளைபெத்தான் அணை என்று ஒரு சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன நிலங்கள் மட்டும்தான் பயன்பெறமுடிகிறது. எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கும், மிஷன்பத்திற்கும் இடையில் பெரிய அளவில் ஒரு தடுப்பணை அமைத்தால் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதிகளில் உள்ள ஊராட்சி பேரூராட்சிகளிலும் உள்ள குடிநீர் பிரச்னைகளையும் தீர்க்க முடியும்.
தற்போது, இந்த பழையாறு ஆகாயத் தாமரைகளால் சூழ்ந்து காணப்படுகிறது. அரசாங்கம் இதனை உடனே அகற்றி இந்த ஆற்றின் நீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பொதுமக்களுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தோவாளை வாய்க்காலில், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் மூலம் வரும் நீர் வராத நேரத்தில், பழையாற்று நீரை தோவாளை கால்வாய் வழியாகக் கொண்டு சென்று பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும். இதுகுறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் நான் பேசப் போகிறேன்.
எனவே அரசாங்கம் மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இப்பகுதியில் ஒரு தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளைத் தொடங்கினால், இப்பகுதியில் நீர்ப் பற்றாக்குறை முற்றிலும் குறையும். இதனால் இப்பகுதி மக்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள்’ என்று கூறினார்.