காஞ்சிபுரம்: கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றித் தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசு அரசி அட்டைதாரர்களுக்கு வழங்கும் கரோனா நிவாரண உதவித்தொகையின் முதல் தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாய விலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 252 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
காவலன் கேட் அருகில் உள்ள நியாய விலைக் கடையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு கரோனா நிவாரண உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், "கரானா காலத்தில் ஏழை எளிய மக்கள் அவதிப் படக்கூடாது என்பதற்காக நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை நல்ல முறையில் பயன்படுத்தி குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, "கரோனா தொற்றின் முதல் அலையைப் போல் இல்லாமல், இரண்டாம் அலையின் தாக்கம் மோசமாக உள்ளது. மிகவும் இளைய வயதினர் இந்த தொற்றினால் மரணமடைந்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் எந்த திட்டபணிகளும் செய்யாமல் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்தாத காரணத்தால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து, பொது மக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் செல்வம், சட்டப்போரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், கூட்டுறவு துறை அலுவலர்கள் லோகநாதன், மணி, மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!