தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர்கள் குமுதா, பாலமணி இருவரும் பணிமுடிந்து நேற்று (மே 15) பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தடுப்பு சுவர்மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செவிலியர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின், இருவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குமுதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பாலமணி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சரியான போக்குவரத்து, தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராததே குமுதாவின் உயிரிழப்புக்கு காரணம் என கூறி மருத்துமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் மலர்விழி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து செவிலியர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.