கடலூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின மாநிலக்குழுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் என். பழனிசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப்பொது செயலாளர் டி. ரவீந்தரன், " சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் ஆதார விலையாக வழங்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்கியது. அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
2020 -21 ஆண்டு அரவைக்கு அனுப்பிய கரும்புக்கு சர்க்கரை ஆலைகள். டன்னுக்கு 2 ஆயிரத்து 707 ரூபாய் 50 பைசா மட்டுமே தருகிறார்கள். இதனுடன் மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ.142.50 விவசாயிகளுக்கு நேரடியாக தரவேண்டும்.
கடலூரில் செயல்பட்டு வந்த அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து விட்டு, ஆலையை மூடிவிட்டனர்.
விவசாயிகள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார், ரூ.500 கோடி வரை கடன் பெற்று ஆலைநிர்வாகம் எடுத்துக்கொண்டது. இந்த ஆலைகளை மாநில அரசு ஏற்று நடந்த வேண்டும்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த வேண்டும். ஆலைகளின் இணை மின்சாரம் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி பிரிவு அமைக்க வேண்டும்.
தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் டீசல் இயந்திரங்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். டீசல் விலை உயர்வினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 7 லட்சம் விவசாயிகளுக்கும் மும்முனை மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வால்பாறையில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகும் சிறுத்தைக் கூட்டம்!